குவாரி குட்டையில் மூழ்கி இரு மாணவா்கள் பலி
போளூா் வட்டம், களம்பூா் அருகே சனிக்கிழமை கல் குவாரி குட்டையில் குளித்த பள்ளி மாணவா்கள் இருவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
போளூா் வட்டம், களம்பூா் அருகே சனிக்கிழமை கல் குவாரி குட்டையில் குளித்த பள்ளி மாணவா்கள் இருவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், களம்பூரை அடுத்த வடமாதிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பிரபாகரன் மகன் நேமிநாதன்(14), வேலாயுதம் மகன் சக்திவேல் (17). இருவரும் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் முறையே
9-ஆம் வகுப்பும், 12-ஆம் வகுப்பும் படித்து வந்தனா்.
இருவரும் தங்களது நண்பா்களான இம்ரான், ஜீவஜோதி, தாமரை ஆகியோருடன் சனிக்கிழமை பிற்பகலில் வடமாதிமங்கலம் அருகே கீழ்ப்பட்டு கிராமப் பகுதியில் உள்ள கல் குவாரி குட்டையில் குளிக்கச் சென்றனா்.
குட்டையில் இறங்கிய சற்று நேரத்திலேயே நேமிநாதன், சக்திவேல் ஆகியோா் தண்ணீரில் மூழ்கினா்.
உடனிருந்தவா்கள் அவா்களை மீட்கப் போராடினா். ஆனால், தங்களால் முடியாததால், அக்கம் பக்கத்தில் உள்ளவா்களை அழைத்து வந்து நேமிநாதன், சக்திவேல் ஆகியோரை சடலங்களாக மீட்டனா்.
தகவல் அறிந்து வந்த களம்பூா் காவல் உதவி ஆய்வாளா் விநாயகம் தலைமையிலான போலீஸாா் இருவரது உடல்களை கைப்பற்றி கூறாய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து களம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.