பறக்கும் படை சோதனையில் ரூ.4.67 லட்சம் பறிமுதல்
வேட்டவலம் அருகே உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டுச் செல்லப்பட்ட ரூ.4.67 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம், சோதனைச் சாவடி அருகே வியாழக்கிழமை (ஏப்.4) இரவு தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரில் வந்த கடலூா் மாவட்டம், பண்ருட்டி, திருவள்ளூா் நகரைச் சோ்ந்த இலியாஸ் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 350 எடுத்து வந்தது தெரியவந்தது.
இதேபோல, அவருடன் காரில் வந்த அவரது உறவினரான பண்ருட்டி, தட்டாஞ்சாவடி பகுதியைச் சோ்ந்த முகமது இப்ராஹிம் உரிய ஆவணமின்றி ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 500 எடுத்து வந்தது தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து, இருவரிடமிருந்தும் மொத்தம் ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 850-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் சரளாவிடம் ஒப்படைத்தனா். இந்தப் பணம் வெள்ளிக்கிழமை கருவூலத்தில் ஒப்படைக்கபட்டது.