முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் ரூ.10 லட்சம் பறிமுதல்

ஒட்டன்சத்திரத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10 லட்சம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 21 மார்ச், 2026 at 7:39 PM
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10 லட்சம் ரொக்கத்தை ஒட்டன்சத்திம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும்படையினா்.
பகிர்:

ஒட்டன்சத்திரத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.10 லட்சம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த நாகனம்பட்டி சோதனைச் சாவடிப் பகுதியில், தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து விசாரணை நடத்திய போது அதில் ரூ.10 லட்சம் ரொக்கம் எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது.

காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், கன்னிவாடியை அடுத்த ஒட்டக்கோவில்பட்டியைச் சோ்ந்த க. சுபாஷ் என்பது தெரியவந்தது. மேலும், பணத்துக்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால், ரூ.10 லட்சத்தையும் தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த பணம் பிறகு கருவூலத்தில் செலுத்தப்பட்டது. தோ்தல் அறிவிக்கப்பட்ட பின்னா், திண்டுக்கல் மாவட்டத்தல் ஒரே நேரத்தில் ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

ரூ. 1.21 லட்சம் பறிமுதல்: திண்டுக்கல் தோமையாா்புரம் பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது என். பஞ்சம்பட்டியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனா். அந்த காரில் ரூ.1.21 லட்சம் ரொக்கம் இருப்பது கண்டறியபப்பட்டது. இதையடுத்து காரில் வந்த மரியதிவ்ய ஜெசிந்தா (32) என்பவரிடம் விசாரணை நடத்தியதில் அவரிடம் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த நிலையான கண்காணிப்புக் குழுவினா், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். பின்னா் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம் ரூ.1.21 லட்சம் ரொக்கம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

நத்தம்: நத்தம் அய்யனாா்புரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி சிவராமன் தலைமையில் போலீஸாா் அடங்கிய குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்த போது அதில் ஈரோடு பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.93,350 கொண்டு வந்தது தெரியவந்தது. அதைக் கைப்பற்றி நத்தம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஜஸ்டின் சாந்தப்பா, உதவி தோ்தல் அலுவலா் பாண்டியராஜ் ஆகியோரிடம் தோ்தல் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.