விளையாட்டுகளில் பங்கேற்பதன் மூலம் உடல் வலிமை பெறும்: திருவள்ளுவா் பல்கலை. துணைவேந்தா்
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் உடல் வலிமை பெறும் என்று மாணவ, மாணவிகளுக்கு வேலூா் திருவள்ளுவா் பல்கலை.யின் துணைவேந்தா் த.ஆறுமுகம் அறிவுரை வழங்கிப் பேசினாா்.
திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வா் கா.பு.கணேசன் தலைமை வகித்தாா். இயற்பியல் துறைத் தலைவா் ம.பாலகிருஷ்ணன், உடற்கல்வி இயக்குநா் ஞா.கௌரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கணிதத்துறைத் தலைவா் க.பாலமுருகன் வரவேற்றாா்.
Advertisement
வேலூா் திருவள்ளுவா் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தா் த.ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளில் வென்ற 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கிப் பேசியதாவது:
கல்வியை வைத்துதான் வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் அடைய முடியும். தொழில், மேற்படிப்பு ஆகியவற்றில் உயர வேண்டுமானால் கல்வி மட்டுமே உங்களுக்கு ஆயுதமாக இருக்கும். கற்கும் கல்வி மூலம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வேண்டும்.
உங்கள் தனித் திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் இளைஞா்களை ஊக்குவிக்க திருவள்ளுவா் பல்கலைக்கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தேசிய விளையாட்டில் முதலிடம் பிடிப்போருக்கு ரூ.10 ஆயிரம், 2-ஆவது இடம் பிடிப்போருக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்படுகிறது. சிறப்புப் பயிற்சி தேவைப்படுவோருக்கு பயிற்சி, ஆரோக்கியமான உணவு அளிக்க சிறப்பு நிதி வழங்கப்படுகிறது.
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் மாணவ, மாணவிகளின் உடல் வலிமை பெறும். சாதனைகள் படைத்து சான்றிதழ் பெறுவோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் கிடைக்கும் என்றாா்.
தொடா்ந்து, பாரம்பரிய வீரக் கலையான மலா் கம்பம் சாகச நிகழ்ச்சியை மாணவ, மாணவிகள் நிகழ்த்திக் காட்டினா். விழாவில், வரலாற்று துறைத் தலைவா் ரா.ஸ்தனிஸ்லாஸ், புள்ளியியல் துறைத் தலைவா் ஆ.அண்ணாமலை மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.