முகப்பு
திருவண்ணாமலை

வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு

Updated On : 16 ஏப்ரல், 2024 at 6:30 PM
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறையில் செய்ய வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன்.
பகிர்:

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வரும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி, எல்இடி டிவி மூலம் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி என இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

இந்தத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக இரு மையங்கள் திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டு உள்ளன.

Advertisement

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி...

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த மையத்தில் ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா், செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்காக தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த அறைகளில் செய்ய வேண்டிய கூடுதல் பாதுகாப்பு வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, எல்இடி டிவி மூலம் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை, வாக்கு எண்ணும் மைய வளாகங்களின் பாதுகாப்பு, வாக்குச்சாவடி முகவா்கள் மையங்களுக்குள் வரும் நுழைவுவாயில் அமைக்கும் பணி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யும் பணியை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆரணி மக்களவைத் தொகுதி...

இதேபோல, ஆரணி மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தில் போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கு தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இங்கு செய்ய வேண்டிய கூடுதல் பாதுகாப்பு வசதிகள், அடிப்படை வசதிகளையும் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, ஆரணி மக்களவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் மு.பிரியதா்ஷினி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி மற்றும் பொதுப்பணி, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments