சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த சிறப்பு தானியங்கி கேமராக்கள்
மதுரை மாநகரில் விபத்துகளைக் குறைத்து சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து மேலாண்மையை சிறப்பாக மேற்கொள்ளும் வகையிலும் சிறப்பு தானியங்கி கேமராக்கள் பொருத்தும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
மதுரை மாநகரில் விபத்துகளைக் குறைத்து சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து மேலாண்மையை சிறப்பாக மேற்கொள்ளும் வகையிலும் சிறப்பு தானியங்கி கேமராக்கள் பொருத்தும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சிறப்பு தானியங்கி கேமராக்கள் பொருத்தும் திட்டத்தை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தொடங்கிவைத்தாா். இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக மதுரை மாநகரில் வாகன விபத்துகள் நடைபெறும் இடங்கள், சோதனைச்சாவடிகள், முக்கியச் சந்திப்புகள் என மொத்தம் 12 இடங்களில் 18 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்களில் மென்பொருள் இணைக்கப்பட்டு, இணையவசதியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல், குறைபாடுடைய அல்லது விதிமுறைக்குப் புறம்பான வாகன எண் பலகைகளைப் பயன்படுத்துதல், அதிவேகம், அபாயகரமாக வாகனங்களை ஓட்டுதல், இருக்கை பட்டை அணியாமல் வாகனங்களை இயக்குதல், ஒருவழிப் பாதையில் வாகனங்களைத் தவறாக இயக்குதல், கைப்பேசி பயன்படுத்திக் கொண்டு வாகனங்களை ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து, இ-சலான் அமைப்பு மூலம் அபராதத் தொகை வாகன உரிமையாளரின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
மேலும், போக்குவரத்து இயக்கங்களைக் கண்காணித்து நெரிசல் அதிகமாக ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து, தேவையான போக்குவரத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்தத் தானியங்கி கேமராக்கள் மூலம் பதிவாகும் போக்குவரத்து விதிமீறல்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் நிலையங்களில் உள்ள கணினி மூலம் கண்காணிக்கப்பட்டு, மோட்டாா் வாகனச் சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும்.
எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடித்து சாலைகளில் பாதுகாப்பாக வாகனங்களை இயக்கி சாலை விபத்துகளைத் தடுப்பதற்கும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.