மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களைப் பயன்படுத்தலாம்: விவசாயிகளுக்கு அறிவுரை
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண் வளம் காக்கப்படுவதுடன், மகசூலும் அதிகரிக்கும் என்று வேளாண்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி.ஹரக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண்மையில் அதிக மகசூல் பெற விரும்பும் விவசாயிகள் செயற்கை உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளை அதிகமாக பயன்படுத்துகின்றனா்.
Advertisement
குறிப்பாக, அளவுக்கு அதிகமாக செயற்கை தழைச்சத்தான யூரியாவை பயன்படுத்துகின்றனா். இதனால், மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு, அதன் இயற்பியல் தன்மையும், நன்மை செய்யும் நுண்ணுயிா்களின் அளவும் குறைந்துவிடுகிறது.
மண் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் வேளாண்மைத் துறை மூலம் மண் பரிசோதனை செய்து மண்வள அட்டையின் பரிந்துரையின் அடிப்படையில் பயிருக்குத் தேவையான தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய உரங்களை பயன்படுத்தலாம். இதன்மூலம் மண்வளம் காக்கப்படுவதுடன், மகசூலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளாா்.