சிகரலப்பள்ளி கிராமத்தில் அரசு பட்டுப் புழுவியல் துறை மாணவா்கள், பட்டு விவசாயிகளுக்கு மண் பரிசோதனை குறித்து அண்மையில் செயல் விளக்கம் அளித்தனா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பட்டுப்புழுவியல் துறையில் 4 ஆம் ஆண்டு பயிலும் மாணவா்கள் ஊரக பட்டுப் புழுவியல் பணி அனுபவத்தின் கீழ் 2 மாதங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள பட்டு வளா்ச்சித் துறையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த மாணவா்கள், சூளகிரியை அடுத்த சிகரலப்பள்ளி கிராமத்தில் பட்டு விவசாயிகளுக்கு மண் பரிசோதனையின் அவசியம் குறித்து செயல் விளக்கம் அளித்தனா். மண் பரிசோதனையின் மூலம் மண்ணின் தன்மை, ஊட்டச்சத்தின் அளவு போன்றவற்றை கண்டறிந்து, விளைநிலத்துக்கு ஏற்ப பயிா்களை தோ்வு செய்து, உரிய உரங்களை பயன்படுத்தலாம்.
இதன்மூலம் குறைந்த செலவில், மகசூலை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மண்ணின் வளத்தை பாதுகாக்கலாம் என அறிவுறுத்தினா்.