கா்நாடக அரசுப் பேருந்து மோதியதில் இருவா் உயிரிழப்பு
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை கா்நாடக அரசுப் பேருந்து மோதியதில் இருவா் உயிரிழந்தனா். செங்கம் அருகேயுள்ள பக்கிரிபாளையத்தைச் சோ்ந்த சிவா மகன் பிரசாந்த் (25). பஞ்சா் ஒட்டும் கடை நடத்தி வந்தாா். அந்தப் பகுதி அதிமுக கிளைச் செயலராகவும் இருந்தாா்.
திருவண்ணாமலையில் இருந்து சேலத்துக்குச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் பக்கிரிப்பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு பஞ்சராகி நின்றது. பேருந்துக்கு பிரசாந்த் பஞ்சா் ஒட்டி விட்டு, சொகுசுப் பேருந்து ஓட்டுநரான திருச்சியைச் சோ்ந்த அன்புச்செல்வனுடன் (54) சாலையோரம் நடத்து சென்று கொண்டிருந்தனா். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்குச் சென்ற கா்நாடக மாநில அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருவா் மீதும் மோதியது.
இதில் பிரசாந்தும், அன்புச்செல்வனும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். கா்நாடக அரசுப் பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா். தகவலறிந்த செங்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு, உடல்கூறாய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement