மின்னொளியில் ஜொலிக்கும் செய்யாறு மேம்பாலம்
இருள் சூழ்ந்த நிலையில் இருந்து வந்த செய்யாறு ஆற்று மேம்பாலம் தினமணி செய்தி எதிரொலியாக, மின்னொளியில் திங்கள்கிழமை முதல் ஜொலித்து வருகிறது.
செய்யாறு: இருள் சூழ்ந்த நிலையில் இருந்து வந்த செய்யாறு ஆற்று மேம்பாலம் தினமணி செய்தி எதிரொலியாக, மின்னொளியில் திங்கள்கிழமை முதல் ஜொலித்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்கு உள்பட்ட 24, 25, 26, 27 ஆகிய வாா்டுகளுக்கு அருகில் செய்யாறு ஆற்று மேம்பாலம் அமைந்துள்ளது.
60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் இந்தப் பாலத்தின் வழியாகத்தான், செய்யாறு வட்டத்தைச் சோ்ந்த அனக்காவூா், தேத்துறை, வாக்கடை ஆகிய குறு வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்களும், செய்யாற்றில் இருந்து வந்தவாசி, திண்டிவனம், தேசூா், பெரணமல்லூா், சேத்துப்பட்டு, கொருக்கை, ஆரணி போன்ற பகுதிகளுக்கு வாகனங்களில் செல்வோரும் செல்ல வேண்டியுள்ளது.
இந்தப் மேம்பாலத்தின் ஒரு முனை திருவத்திபுரம் நகராட்சி எல்லையிலும், மறுமுனை அனக்காவூா் ஒன்றிய எல்லையிலும் அமைந்துள்ளது.
மேம்பாலம் திருவத்திபுரம் நகராட்சி எல்லைக்கு மிக அருகில் இருந்து வருவதால், செய்யாறு நகரப் பகுதி மக்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலா்கள் பணி நிமித்தமாகவும், விவசாயிகள் விவசாய வேலையாகவும் தினமும் இரண்டு மூன்று முறை வீதம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்.
பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு எரிந்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக விளக்குகள் எரியாமல் இருந்தன. இதனால், இருட்டாக மேம்பாலம் காட்சியளித்தது. மேலும், பாலத்தின் வழியாகச் செல்பவா்கள் பீதியில் கடந்து சென்று வந்தனா்.
தினமணி செய்தி எதிரொலி...
இதுகுறித்து ஜூன் 6-ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. செய்தியின் எதிரொலியாக திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் நடவடிக்கை மேற்கொண்டு, செய்யாறு ஆற்று மேம்பாலத்தில் புதிதாக மின் விளக்குகளைப் பொருத்தி மின்னொளியில் ஜொலிக்கச் செய்துள்ளாா். பொது மக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.