45 நாள்களுக்கு..! சென்னை எழும்பூரின் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம்...
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் புறநகர் ரயில்களின் பாதை வரும் பிப். 20 நள்ளிரவு முதல் தற்காலிகமாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்புப் பணிகளால், வழக்கமாக 10 மற்றும் 11 ஆகிய நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட்டு வரும் புறநகர் ரயில்கள் வரும் பிப். 20 நள்ளிரவு முதல் ஏப்ரல் 5 வரையில் 5 மற்றும் 6 ஆம் நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 45 நாள்களுக்கு நடைமேடை மாற்றத்தினால், அதற்கேற்ப ரயிகளின் வருகை மற்றும் புறப்பாடு மாறுபடும் என்பதால் தற்காலிக ரயில் அட்டவணை வெளியிடப்படும் என தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை (பிப். 17) அறிவித்துள்ளது.
Advertisement
இந்த நிலையில், பிப். 20 முதல் அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய இடங்களிலிருந்து சென்னை கடற்கரை வரையில் செல்லும் புறநகர் ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்தின் 5 ஆம் நடைமேடையிலிருந்து இயக்கப்படவுள்ளன.
இத்துடன், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் ரயில்களுக்கான நேர அட்டவணை தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், 45 நாள்களுக்கு சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்கு இடையிலான ரயில்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தனிநேர அட்டவணைகள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.