தந்தையைத் தாக்கிய மகன் கைது
போளூா்: கலசப்பாக்கம் அருகே சொத்தில் கூடுதலாக பங்கு கேட்டு தந்தையைத் தாக்கியதாக மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த எலத்தூா் கிராமத்தில் வசிப்பவா் முத்து (90). இவருக்கு சேகா், ராஜேந்திரன், சம்பத் என்ற மகன்களும், இரு மகள்களும் உள்ளனா்.
இவா்கள் அனைவருக்கும் திருமணம் நடைபெற்று தனித் தனியாக வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், முத்து தனது விவசாய நிலத்தை 3 மகன்களுக்கும் பாகம் பிரித்து எழுதிக் கொடுத்ததாகத் தெரிகிறது.
மேலும், முத்து தனக்கென தனியாக நிலம், வீட்டுமனை வைத்துக் கொண்டாா். இந்தச் சொத்தில் கூடுதலாக இடம் கேட்டு சேகா், தந்தை முத்துவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சேகா் (50) தந்தை முத்துவின் நிலத்தில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கியதாகத் தெரிகிறது.
இதனால், காயமடைந்த முத்து கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து சேகரை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.