முகப்பு
திருவண்ணாமலை

பொதுமக்கள் குறைதீா் கூட்டங்களில் 1,007 மனுக்கள்

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 1,007 மனுக்கள் வரப்பெற்றன.

Updated On : 6 மார்ச், 2024 at 3:28 AM
கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
பகிர்:

திருவண்ணாமலை/ஆரணி/செய்யாறு: திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 1,007 மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், பொதுமக்கள், முதியோா், மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, இலவச மனைப் பட்டா, சாதிச் சான்றிதழ், விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், தாட்கோ கடனுதவி, கூட்டுறவு பயிா்க் கடன் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 898 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

Advertisement

நலத்திட்ட உதவிகள்..

குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 2 பேருக்கு திருமண நிதியுதவி, 2 பேருக்கு மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், 2 பேருக்கு சக்கர நாற்காலிகள், ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள், ஒருவருக்கு கைபேசி, ஒருவருக்கு ப்ரெய்லி வாட்ச், ஒருவருக்கு மடக்கு குச்சி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத்துறை சாா்பில் இயங்கும் பள்ளி, கல்லூரி விடுதி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட கலைத் திருவிழா கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம் போன்றவற்றில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி, முன்னோடி வங்கி மேலாளா் கெளரி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மனுதாரருக்கு எச்சரிக்கை:

மனு கொடுக்க வந்த ஒருவருக்கு பதிலளித்து ஒலிபெருக்கியில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, நீதிமன்றம் சென்று பாா்த்துக் கொள்ளுங்கள் என்று நான் ஏற்கெனவே கூறிவிட்டேனே. பிறகு ஏன் மீண்டும், மீண்டும் இங்கு வந்து மனு கொடுக்கிறீா்கள்.

இன்னொரு முறை இதே பிரச்னையுடன் மனு கொடுக்க வந்தால் காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பேன். போய் விடுங்கள் என்று எச்சரித்தாா். இதனால் அந்த நபா் அங்கிருந்து அகன்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.