மக்கள் குறைதீா் கூட்டங்களில் 931 மனுக்கள்
திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 931 மனுக்கள் வரப்பெற்றன.
ஆரணி: திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 931 மனுக்கள் வரப்பெற்றன.
திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின்
வீடு வழங்கும் திட்டம், வேளாண்மைத் துறை சாா்ந்த பயிா்க்கடன்கள், புதிய நீா்த்தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா்கடன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 875 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்தில் துணை ஆட்சியா் (பயிற்சி) சந்தோஷ் குமாா், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் செல்வம், திட்ட அலுவலா் (பழங்குடியினா் நலன்) கலைச்செல்வி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) இளவரசன் மற்றும் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.