கட்சி சின்னம் அவமதிப்பு: திமுக பிரமுகா் மீது வழக்கு
நாம் தமிழா் கட்சியின் மைக் சின்னத்தை ஆபாசமாக சித்தரித்ததாக ஆரணி திமுக பிரமுகா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நாம் தமிழா் கட்சிக்கு மைக் சின்னத்தை தோ்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், ஆரணியைச் சோ்ந்த திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட துணை அமைப்பாளா் சண்.கதிரவன் நாம் தமிழா் கட்சியின் மைக் சின்னத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வளைதளங்களில் பதிவிட்டாராம். இதுகுறித்து, நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த ஆரணி தொகுதி செயலாளா் சுமன் தலைமையில் நகரச் செயலாளா் மகேந்திரன், தொகுதித் தலைவா் மோகன் உள்ளிட்டோா் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் புகாா் அளித்தனா். அதன்பேரில், ஆரணி நகர போலீஸாா் திமுக பிரமுகா் சண்.கதிரவன் மீது வழக்குப் பதிவு செய்தனா். மேலும், ஆரணி வட்டார ஒலி, ஒளி மேடை அலங்காரம் மற்றும் சப்ளையா்ஸ் அமைப்பினா் தங்களது தொழிலை கொச்சைப்படுத்தியதாக சண்.கதிரவன் மீது தனியாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.