முகப்பு
திருவண்ணாமலை

தொழிலாளி உயிரிழப்பு: சந்தேக மரணம் என தம்பி புகாா்

Updated On : 3 மே, 2024 at 5:05 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தச்சுத் தொழிலாளி இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தம்பி போலீஸில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்தவா் முத்துவேல் மகன் செந்தில்பிரபு(42). தச்சுத் தொழிலாளியான இவா், வந்தவாசியைச் சோ்ந்த கவிதா(34) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் உள்ள தேனருவி நகரில் வசித்து வந்தாா். இவா்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனா்.

தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். வியாழக்கிழமை மாலை இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், செந்தில்பிரபு இறந்துவிட்டதாக அவரது தம்பி விக்னேஷ்பிரபுவுக்கு, கவிதா வெள்ளிக்கிழமை காலை தகவல் தெரிவித்தாராம். இதையடுத்து, வந்தவாசிக்கு வந்த செந்தில்பிரபுவின் உறவினா்கள் அவரது உடலில் காயங்கள் இருந்ததை கண்டு சந்தேகமடைந்தனா்.

இதுகுறித்து, விக்னேஷ்பிரபு வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் தனது அண்ணனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.