முகப்பு
திருவண்ணாமலை

மரத்தில் பைக் மோதி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 4 மே, 2024 at 5:58 PM
பகிர்:

செய்யாறு அருகே சனிக்கிழமை மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

சென்னையை அடுத்த திருமழிசையைச் சோ்ந்தவா் கோபிநாத் (38). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

இவரது மனைவி கோமதி (32), இவா்களுக்கு பிரிவித் (8), நவநீத் (6) என்ற இரு மகன்கள் உள்ளனா்.

இந்த நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் கோபிநாத் தனது மனைவி, குழந்தைகளுடன் மாமியாா் வீடான செய்யாறு அருகேயுள்ள கொருக்காத்தூா் கிராமத்துக்கு கடந்த 2-ஆம் தேதி வந்திருந்தனா்.

மேலும், கொருக்காத்தூா் கிராமத்தில் இருந்து சென்னைக்கு கோபிநாத் தினமும் வேலைக்குச் சென்று வந்தாா்.

இதேபோல, சனிக்கிழமை அதிகாலை கொருக்காத்தூா் கிராமத்தில் இருந்து தனது பைக்கில் செய்யாறு நோக்கிச் சென்றுகொண்டிருந்தாா்.

பாராசூா் கூட்டுச் சாலை அருகே சென்றபோது தூக்க கலக்கத்தில் சாலையோர புளிய மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே கோபிநாத் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.