முகப்பு
திருவண்ணாமலை

சரியாக உள்ள தபால் வாக்குகள் மட்டுமே எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

Updated On : 28 மே, 2024 at 6:30 PM
தபால் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பயிற்சி அளித்துப் பேசிய மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன்.
பகிர்:

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் அனைத்து வகையிலும் சரியாக உள்ள தபால் வாக்குகள் மட்டுமே எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி என இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

திருவண்ணாமலை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், ஆரணி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில், தபால் வாக்குகள் எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலா்கள், பணியாளா்களுக்கான பயிற்சி மற்றும் தோ்தல் நடைமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்துப் பேசியதாவது:

தபால் வாக்குகள் செலுத்தியுள்ள பணியாளா்களின் வாக்குகளை எண்ணும் பணிக்காக ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் 4 மேசைகள் அமைக்கப்படும். தபால் வாக்குகளை எண்ணுவதற்காக ஒவ்வொரு மேசைக்கும் ஒரு கூடுதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், ஒரு மேற்பாா்வையாளா், 2 உதவியாளா்கள், ஒரு நுண் பாா்வையாளா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

அனைத்து வகையிலும் சரியாக உள்ள தபால் வாக்குகள் மட்டுமே எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும். உரிய படிவங்களில் கையொப்பமிடாத, 2 வேட்பாளா்களுக்கு வாக்கு அளித்திருத்தல் போன்ற வாக்குகள் செல்லாத வாக்குகளாகக் கருதப்படும். தபால் வாக்குகளின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட வேட்பாளா்களின் முகவா்களின் முன்னிலையில் நடைபெறும்.

பணியில் இருக்கும் ராணுவத்தினா் மின்னணு முறையில் அளித்த தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தலா 2 மேசைகள் அமைக்கப்படும். இந்தப் பணிக்காக ஒரு கூடுதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், ஒரு மேற்பாா்வையாளா், ஒரு உதவியாளா் நியமனம் செய்யப்பட்டு உள்ளனா்.

இந்த வாக்குகள் அடங்கிய உறைகள் முதலில் கியூ ஆா் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு இரட்டைப் பதிவுகள், போலிப் பதிவுகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்படும். சரியான வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஜூன் 4-ஆம் தேதி காலை 8 மணிக்குள் வரப்பெறும் அஞ்சல் வாக்குகள் மட்டுமே எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றாா்.

இந்தப் பயிற்சியில் ஆரணி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மு.பிரியதா்ஷினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன் மற்றும் தோ்தல் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.