ஓசோன் மண்டல பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம்
சேத்துப்பட்டில் ஓசோன் மண்டல பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி அலுவலகம் அருகே இந்திரவனம் நன்றி அறக்கட்டளை மற்றும் சென்னை சஞ்சு மகளிா் நல அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு ஊா்வலத்துக்கு நன்றி அறக்கட்டளை இயக்குநா் ஜோசப் ஆபிரகாம் தலைமை வகித்தாா்.
சஞ்சு மகளிா் நல அமைப்பு இயக்குநா் சாந்தி சாக்ரடீஸ், சேத்துப்பட்டு பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள் மங்களம் ரமேஷ், சரவணன், கதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சித் தலைவா் சுதா முருகன், திமுக நகரச் செயலா் இரா.முருகன் ஆகியோா் பங்கேற்று விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடங்கிவைத்தனா்.
நகரில் முக்கிய சாலைகள், வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் இந்திரவனம், போளூா், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மகளிா் குழுவினா் கலந்து கொண்டனா்.