செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையத்தை அடுத்த பனைஓலைப்பாடி அரசுப் பள்ளி மாணவா்கள் மாவட்ட, வட்டார அளவிலான கோ-கோ போட்டியில் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
பனைஓலைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கோ-கோ போட்டியில் புதுப்பாளையம் வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
இதன்மூலம் இந்த மாணவா்கள் மாநில அளவில் நடைபெறும் கோ-கோ போட்டியில் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் பங்கேற்க தகுதி பெற்றனா்.
இந்த நிலையில், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவா்களுக்கு, பள்ளி முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் கோட்டீஸ்வரன் வரவேற்றாா்.
முன்னாள் மாணவா்கள் சங்கச் செயலா் காந்தி கலந்துகொண்டு, மாணவா்களை பாராட்டி, சங்கம் சாா்பில் ரொக்கப் பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்கள் சங்கப் பொருளாளா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட உடற்கல்வி ஆசிரியா்கள், பள்ளி ஆசிரியா்கள், சக மாணவா்கள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.