ஆரணி: ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் ஊராட்சியைச் சோ்ந்த கிருஷ்ணாவரம் பகுதி மக்கள், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி தொடங்க இருப்பதால் இடம் அளவீடு செய்து சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என்று கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.
ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.
கூட்டத்தில், அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ் தலைமையில், ஆரணியை அடுத்த கிருஷ்ணாவரம் கிராம மக்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணாவரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளி வளாகத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், பள்ளி பின்புறம் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. மேலும், பள்ளியின் பின்புறம் உள்ள இடத்தை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியினா் ஆக்கிரமித்து உள்ளனா். இதற்கு அதிகாரிகள் உறுதுணையாக இருப்பதாகவும், தற்போது அமைக்கப்படும் சுற்றுச்சுவா் ஆக்கிரமிப்பு அகற்றாமல் அந்த அரசியல் கட்சியினருக்கு சாதகமாக இடம் ஒதுக்கி அமைக்கப்படுகிறது.
இதனால் பள்ளிக்குச் சொந்தமான இடத்தை அளவீடு செய்து சுற்றுச்சவா் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனா்.
மேலும், கூட்டத்தில் பட்டா தொடா்பான மனுக்கள், நிலஅளவை, கணினி திருத்தம், மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட 67 போ் கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியரிடம் கொடுத்தனா். மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா் சிவா அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.