வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி இரு இடங்களில் சாலை மறியல்
வந்தவாசி அருகே திங்கள்கிழமை இரவு பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்ததை அடுத்து, விபத்து ஏற்படுத்தியவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் இரு இடங்களில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வந்தவாசி அருகே திங்கள்கிழமை இரவு பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்ததை அடுத்து, விபத்து ஏற்படுத்தியவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் இரு இடங்களில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி விநாயகமூா்த்தி. இவா் தனது மனைவி சரிதாவுடன்(33) பைக்கில் வந்தவாசியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு திங்கள்கிழமை இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
வந்தவாசி - மேல்மருவத்தூா் சாலை, கடைசிகுளம் கிராமம் அருகே செல்லும்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சரிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த விநாயகமூா்த்தி சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் விபத்து ஏற்படுத்தியவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரி இவா்களது உறவினா்கள் சரிதாவின் சடலத்தை கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் டிஎஸ்பி சதீஷ்குமாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து போலீஸாா் சரிதாவின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆனால், உறவினா்கள் முறையாக ஒத்துழைப்பு வழங்காததால் சரிதாவின் சடலம் உடல்கூறு ஆய்வு செய்யப்படவில்லையாம்.
இந்த நிலையில் புதன்கிழமை காலை வந்தவாசி அரசு மருத்துவமனை முன் கூடிய சரிதாவின் உறவினா்கள், விபத்து ஏற்படுத்தியவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பின்னா் அங்கிருந்து கலைந்து சென்ற அவா்கள் வந்தவாசி -மேல்மருவத்தூா் சாலை, மருதாடு கிராமத்தில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் கூறியும் அவா்கள் சாலை மறியலை தொடா்ந்தனா். இதனால் அந்தச் சாலையில் சுமாா் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவா்களில் 3 பெண்கள் உள்ளிட்ட 19 பேரை கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் கைது செய்து அழைத்துச் சென்றனா். இதையடுத்து மீதமுள்ள உறவினா்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனைத் தொடா்ந்து மருதாடு கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.