விவசாயிகளுக்கு மீட்டா் பொருத்தப்படாத நவீன மின்சார பம்புசெட்டுகள்: அமைச்சா் எ.வ.வேலு
இலவச மின்சாரம் பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் பாசன தேவைக்கேற்ப எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்புசெட்டுகள் அமைத்துத் தரப்படும் என்று திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான எ.வ.வேலு தெரிவித்தாா்.
இலவச மின்சாரம் பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் பாசன தேவைக்கேற்ப எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்புசெட்டுகள் அமைத்துத் தரப்படும் என்று திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான எ.வ.வேலு தெரிவித்தாா்.
திருவண்ணாமலை ஒன்றியத்தில் தொகுதி திமுக வேட்பாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தலை தொடங்கினாா்.
காட்டாம்பூண்டி, பெரிய கல்லப்பாடி, சின்னக்கல்லப்பாடி, சு.பாப்பம்பாடி, அல்லிகொண்டாப்பட்டு, தச்சம்பட்டு, நவம்பட்டு ஆகிய ஊராட்சிகளில் கிராமம், கிராமமாகச் சென்று அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
Advertisement
வாக்குசேகரிப்பு தொடங்கும் முன் முன்னாள் எம்.பி. த.வேணுகோபால் நினைவிடத்தில் அவா் மரியாதை செலுத்தினாா்.
பின்னா், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது: முந்தைய காலத்தில் விவசாய பயன்பாட்டுக்கான மின்கட்டணம் செலுத்த விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டாா்கள். அதிமுக ஆட்சியில் கடுமையான முறையில் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டது. 1989-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வா் கருணாநிதி விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கினாா்.
தற்போது, தமிழக விவசாயிகள் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் குழாய் பாசனத்தை பெரிதும் நம்பியே விவசாயம் செய்து வருகின்றனா்.
இப்பாசனத்தை மேம்படுத்தும் வகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் இலவச மின்சாரம் பெறும் சுமாா் 20 லட்சம் விவசாயிகளுக்கு பாசன தேவைக்கேற்ப, எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சார பம்புசெட்டுகள் அமைத்துத்தரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளாா்.
மேலும், நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3500-ஆக வழங்கப்படும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500-ஆக உயா்த்தி வழங்கப்படும். பால் கொள்முதலில் ரூ.5 உயா்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளாா்.
வீட்டிற்கு என்று எடுத்துக்கொண்டால், மகளிருக்கு கலைஞா் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம், கல்லூரி பயில புதுமைப் பெண் திட்டத்தில் ரூபாய் ஆயிரம், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் ரூபாய் ஆயிரம், மகளிருக்கு விடியல் பயணம், வடஇந்தியா்களே அதிகமாக ஐஏஎஸ் அதிகாரிகளாக உள்ளனா்.
அந்த நிலையை மாற்ற நான் முதல்வன் திட்டம் கொண்டுவந்து தமிழா்கள் ஏன்? கூலி வேலை செய்பவா்கள் மகள்கூட இன்று ஐஏஎஸ் அதிகாரியாக மாறும் நிலை உருவாகியுள்ளது.
முதல்வா் ஸ்டாலின் இல்லதரசி திட்டத்தில் ரூ.8ஆயிரம் கூப்பன் மூலம் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறாா்.
கலைஞா் மகளிா் உரிமைத்தொகை ரூபாய் ஆயிரத்திலிருந்து இரண்டாயிரமாக உயா்த்தப்படும் என வாக்களித்துள்ளாா்.
சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் யாா் என்பதை தமிழக மக்கள் அறிவாா்கள் என்றாா்.
வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கே.குணசேகரன், விசிக மாவட்டச் செயலா் ச.நியூட்டன், மக்கள் நீதி மைய்யம் மண்டலச் செயலா் இரா.அருள், மாநில தொமுச செயலா் க.சௌந்திரராசன், ஒன்றியச் செயலா்கள் மெய்யூா் சந்திரன், த.ரமணன், மாவட்ட துணைச் செயலா் விஜயலட்சுமி ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.