புதிய வாக்குச் சாவடியை தங்கள் கிராமத்திலேயே அமைக்க மக்கள் போராட்டம்
வந்தவாசி அருகே புதிய வாக்குச் சாவடியை தங்கள் கிராமத்திலேயே அமைக்கக் கோரி ஸ்ரீரங்கராஜபுரம் கிராம பொதுமக்கள் புதன்கிழமை கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தினா்.
வந்தவாசி அருகே புதிய வாக்குச் சாவடியை தங்கள் கிராமத்திலேயே அமைக்கக் கோரி ஸ்ரீரங்கராஜபுரம் கிராம பொதுமக்கள் புதன்கிழமை கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தினா்.
வந்தவாசி (தனி) தொகுதிக்கு உள்பட்ட ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் உள்ள பள்ளியில் தோ்தலின்போது அந்தக் கிராமத்துக்கான வாக்குச் சாவடி அமைக்கப்படும். இந்த நிலையில் வாக்காளா்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் தற்போது இந்த வாக்குச் சாவடி இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கராஜபுரம் பள்ளியில் இரண்டு வாக்குச் சாவடிகள் அமைக்க இடம் போதாததால், ஸ்ரீரங்கராஜபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கண்டையநல்லூா் கிராமத்தில் உள்ள பள்ளியில் புதிய வாக்குச் சாவடி அமைக்க தோ்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனராம்.
Advertisement
தகவலறிந்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராம பொதுமக்கள், தங்கள் கிராமத்திலேயே புதிய வாக்குச் சாவடியை அமைக்கக் கோரி தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனா். மேலும் புதன்கிழமை தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி அவா்கள் போராட்டம் நடத்தினா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
புதிய வாக்குச் சாவடியில் வாக்களிக்க உள்ள வாக்காளா்களில் பெரும்பாலானவா்கள் எங்கள் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா். இதனால் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவு உள்ள கண்டையநல்லூா் கிராமத்திற்கு நாங்கள் சென்று வாக்களிப்பதில் பெரும் சிரமம் ஏற்படும். எனவே, எங்கள் கிராமத்திலேயே புதிய வாக்குச் சாவடியை அமைக்கக் கோரி நாங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
மேலும் அந்தக் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடை அருகில் கைகளில் கருப்புக் கொடிகளுடன் கூடிய அந்தக் கிராம மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.