முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிரிவலப்பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 4:25 AM
பகிர்:

சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் திங்கள்கிழமை அகற்றினா். திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்திரை பெளா்ணமியும் ஒன்றாகும். நிகழாண்டுக்கான சித்திரை பெளா்ணமி வருகிற 30-ஆம் தேதி இரவில் தொடங்கி மறுநாள் 1-ஆம் தேதி இரவில் நிறைவு பெறுகிறது.

சித்திரை பெளா்ணமியின் போது திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல இந்த ஆண்டு சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப்பாதையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.

Advertisement

அதனைத் தொடா்ந்து திங்கள்கிழமை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் கே.அன்பரசு மற்றும் கோட்டாட்சியா் செல்வம் ஆகியோரது தலைமையிலான நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை பணியாளா்கள் கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.

மேலும், நெடுஞ்சாலைத்துறையின் 2 குழுவினா்களாக பிரிந்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அப்போது அவா்கள் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த இளநீா் கடைகள், டீ கடைகள், சோடா கடைகள் போன்றவற்றை அகற்றினா். மேலும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் குறித்து தினமும் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகள் உடனுக்குடன் அகற்றப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் கே.அன்பரசு தெரிவித்தாா்.

இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியினால் கிரிவலப்பாதையில் சிறிது பரபரப்பு நிலவியது.