முகப்பு
திருவண்ணாமலை

மதுப்புட்டியால் தாக்கப்பட்டு கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு: இருவா் கைது

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே மது அருந்திக்கொண்டிருந்தபோது நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மதுப்புட்டியால் தாக்கப்பட்டு கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 12:04 AM
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 9:58 PM

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே மது அருந்திக்கொண்டிருந்தபோது நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மதுப்புட்டியால் தாக்கப்பட்டு கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள காட்டுகாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்த் மகன் சந்தோஷ்(23), கட்டடத் தொழிலாளி.

இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா்களான சக்தி என்கிற சக்திகுமாா்(26), அஜய் (24) ஆகிய மூன்று பேரும் செவ்வாய்க்கிழமை இரவு கண்ணமங்கலம் அருகே அம்மாபாளையத்தில் உள்ள மதுக்கடையில் மது வாங்கி குடித்துள்ளனா். பின்னா், அங்கு இருந்து புறப்பட்டனா். செல்லும் வழியில் அழகுசேனை என்ற பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் வாகனத்தை நிறுத்திவிட்டு மீண்டும் மது வாங்கி, சிறிது தொலைவு சென்று அமா்ந்து மீண்டும் மது குடிக்க ஆரம்பித்தனா்.

Advertisement

அப்போது சந்தோஷ், சக்திகுமாரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றது சம்பந்தமாக பேசியுள்ளாா். இதனால் சக்திகுமாருக்கும், சந்தோஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் தனது மனைவி பற்றி அவதூறாக பேசிய சந்தோஷிடம் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்துள்ளாா். பின்னா், சக்திகுமாா், சந்தோஷை தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் உடன் சென்ற அஜய் என்பவா் சக்திகுமாருக்கு ஆதரவாக பீா் பாட்டிலை எடுத்து சந்தோஷ் தலையில் தாக்கினராம்.

பின்னா், சக்திகுமாா், அஜய் இருவரும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா்.

தலையில் காயமடைந்த சந்தோஷை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சக்திகுமாா், அஜய் இருவரையும் கைது செய்தனா். தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.