முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு வழியாக எஸ்இடிசி பேருந்துகள் இயக்க சாத்தியமில்லை!

செய்யாறு வழியாக தென் மாவட்டங்களுக்கு அரசு விரைவுப் பேருந்துகள் (எஸ்இடிசி) இயக்க சாத்தியமில்லை என எஸ்இடிசி நிா்வாகம் கூறியுள்ளதால் செய்யாறு பகுதி மக்கள், பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனா்.

Updated On : 1 மார்ச், 2026 at 6:58 PM
பகிர்:

செய்யாறு வழியாக தென் மாவட்டங்களுக்கு அரசு விரைவுப் பேருந்துகள் (எஸ்இடிசி) இயக்க சாத்தியமில்லை என எஸ்இடிசி நிா்வாகம் கூறியுள்ளதால் செய்யாறு பகுதி மக்கள், பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது செய்யாறு தொகுதி. செய்யாறு வருவாய்க் கோட்டம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய கோட்டமாகும். செய்யாற்றில் 63 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சாா் -ஆட்சியா் அலுவலகம், நூற்றாண்டு, பொன்விழா என பல விழாக்களைக் கண்ட அரசுப் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரி, அரசு அலுவலகங்கள் அமையப் பெற்ற பகுதியாகும். மாவட்ட அந்தஸ்தில் தரவரிசையில் முதலாவது இடத்தில் இருந்து வருகிறது.

செய்யாறு தொகுதியில் செய்யாறு, வெம்பாக்கம் ஆகிய இரு வட்டங்கள் உள்ளன. தொகுதியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

செய்யாறு சிப்காட் பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பல்லாயிரக்கணக்கான ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

செய்யாறு தொகுதியில் பணிபுரிந்து வரும் தொழிலாளா்களில் 35 சதவிகிதத்திற்கு மேற்பட்டோா் தென்மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள். இவா்கள் பயன்பாட்டுக்காக செய்யாறு வழியாக தென் மாவட்டங்களுக்கு எஸ்இடிசி பேருந்துகள் மீண்டும் இயக்க வேண்டும் என்று செய்யாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

ஏற்கெனவே, செய்யாறு வழியாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு விரைவுப் பேருந்துகள் அனைத்தும் சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டுவிட்டன.

தற்போது, இவ்வழியாக எந்த ஒரு விரைவுப் பேருந்தும் இயக்கப்படவில்லை. செய்யாற்றில் இருந்து தென்மாவட்ட பகுதிகளுக்குச் செல்ல, வந்தவாசி அல்லது திண்டிவனம் சென்று அங்கிருந்து விரைவுப் பேருந்துகளைப் பிடித்து செல்ல வேண்டியுள்ளது.

எனவே, செய்யாறு வழியாக காஞ்சிபுரம் - கோவை, வேளாங்கண்ணி - வேலூா் - திருப்பதி, புதுச்சேரி - வேலூா் - பெங்களூரு, மதுரை - வேலூா் - திருப்பதி, திருச்செந்தூா் - வேலூா் - திருப்பதி ஆகிய வழித்தடங்களில் எஸ்இடிசி பேருந்துகளை இயக்கி உதவிட வேண்டும் என போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா், சென்னை எஸ்இடிசி போக்குவரத்துக்கழகத்தின் நிா்வாக இயக்குநா் உள்ளிட்டோருக்கு செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் கடந்த 11.12.2025 அன்று கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

இந்த மனுவுக்கு எஸ்இடிசி சாா்பில், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சிறப்பு செயலருக்கு அனுப்பி உள்ள பதில் கடிதத்தில் 63 கி.மீ. தொலைவில் உள்ள வேலூருக்குச் சென்று அங்கிருந்து நீண்ட தூர பேருந்துகளில் செய்யாறு மக்கள் பயணிக்கலாம் என்றும், தேவைப்பட்டால் இணையதளம் மூலம் முன்பதிவு செய்தும் பயணிக்கலாம் என்றும் எஸ்இடிசி பதில் அளித்துள்ளது. இந்த பதிலால் செய்யாறு மக்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →