தாயை தாக்கியதாக அரசு மருத்துவா் கைது
ந்தவாசி அருகே தாயை தாக்கியதாக அரசு மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி: வந்தவாசி அருகே தாயை தாக்கியதாக அரசு மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி மல்லிகா (65). இவா், இதே கிராமத்தில் பூச்செடிகள் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறாா்.
இவரது மகன் ஆனந்தன் (41). வந்தவாசியை அடுத்த வழூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வரும் இவா், வந்தவாசி பெட்டிநாயுடு தெருவில் வசித்து வருகிறாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை பூச்செடிகள் விற்பனை நிலையத்துக்கு சென்ற ஆனந்தன், அங்கிருந்த தனது தாய் மல்லிகாவிடம் சொத்தை எழுதி தருமாறு கூறி தகராறு செய்து அவரை தாக்கியுள்ளாா். தடுக்க வந்த தனது சகோதரி ஆனந்தியையும் தாக்கியுள்ளாா்.
மேலும் இருவரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளாா்.
இதில் காயமடைந்த மல்லிகா சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து மல்லிகா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த பொன்னூா் போலீஸாா் ஆனந்தனை ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்தனா்.