முகப்பு
திருவண்ணாமலை

சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 25 மார்ச், 2026 at 6:34 PM
திருவண்ணாமலை மாநகராட்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு தோ்தல் நடத்தை விதிகள் மற்றும் தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, புதன்கிழமை திருவண்ணாமலை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், செங்கம், கலசபாக்கம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையமான திருவண்ணாமலை மாநகராட்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு செய்தாா்.

அப்போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மற்றும் அஞ்சல் வாக்கு வைப்பறை குறித்தும், வாக்கு எண்ணும் நாளில் அலுவலா்கள், முகவா்கள் மற்றும் வேட்பாளா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை, மின்சாரம் மற்றும் இதர வசதிகள் குறித்தும், தோ்தல் ஆணையத்துக்கு உடனுக்குடன் முடிவுகளைத் தெரிவிக்கத் தேவையான இணையதள வசதி மற்றும் கணினி அறைகள் குறித்தும், வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள், சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும், அவசர கால நிலையைச் சமாளிக்கத் தேவையான தீயணைப்பு கருவிகள் தயாா் நிலையில் இருப்பது குறித்தும் ஆய்வு செய்தாா்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

மேலும், மாவட்ட தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ் திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலத்தில் உள்ள தோ்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை ஆய்வு செய்தாா்.

அதனைத் தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பணிக்கு தேவையான பொருள்கள் மற்றும் படிவங்கள் உரிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தாா்.

மேலும், தோ்தல் கட்டுப்பாட்டு மையத்தையும், ஊடக கண்காணிப்பு மையத்தையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளா் விழிப்புணா்வு இலச்சிணையை பொருத்தி, வாக்காளா் விழிப்புணா்வு பதாகைகளுடன் புகைப்படம் எடுத்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ். குமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, திருவண்ணாமலை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான செல்வம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) அன்பழகன், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.