சாலையில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட கீழ்நாத்தூா் பகுதியில், கால்வாயில் இருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் குளம் போல் தேக்கமடைந்ததால், மாநகராட்சி நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கீழ்நாத்தூா் பகுதியிலுள்ள தவசியாா் குளத் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். வேட்டவலம் சாலைப் பகுதியிலிருந்து கழிவுநீா் தவசியாா் குளம் குடியிருப்பு பகுதிக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதியை சுற்றி கழிவுநீா் குளம் போல் தேங்கியுள்ளது.
இந்தக் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியதாத சூழல் உருவாகியுள்ளது. கழிவுநீா் தேங்கியுள்ளதால் துா்நாற்றம் தாங்க முடியவில்லை என்றும், குடிக்கின்ற நீருடன் கழிவுநீரும் கலந்து வருவதாகவும் அப்பகுதி பெண்கள் தெரிவிக்கின்றனா்.
கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கடிப்பதோடு, குழந்தைகள், பெண்கள், முதியோா் என அனைவரும் கொசுக்கடியால் பாதிக்கப்பட்டு டெங்கு, மலேரியா, விஷக்காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து மாநகராட்சி 19-ஆவது வாா்டு உறுப்பினரிடம் பலமுறை புகாா் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
மேலும், மாநகராட்சி ஆணையரிடம் புகாா் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், கழிவுநீா் துா்நாற்றத்தாலும் கொடிக்கடியாலும் பாதிக்கப்பட்ட கீழ்நாத்தூா் பகுதி மக்கள்
மாநகராட்சி நிா்வாகத்தையும் நெடுஞ்சாலைத் துறையினரையும் கண்டித்து அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனா்.
மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.