சொன்னதும் செய்ததும்
சேவூர் எஸ்.ராமச்சந்திரன்
ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக-வைச் சேர்ந்த சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடர்ந்து இரண்டாவது முறையாக 2021 சட்டப் பேரவைத் தேர்தலிலும் வெற்றிபெற்று எம்எல்ஏவாக உள்ளார். இவர், முன்னதாக 2016 தேர்தலில் வெற்றிபெற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார்.
2021 தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீர்களா என சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடம் எம்எல்ஏவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
நான் கடந்த முறை அமைச்சராக இருந்தபோதே ஆரணி தொகுதிக்குத் தேவையான நலத் திட்டங்களை செய்துவிட்டேன். ஆரணி கோட்டை மைதானத்தில் என்னுடைய முயற்சியினால்தான் சுமார் ரூ.ஒரு கோடி மதிப்பில் நடைப்பாதை அமைக்கப்பட்டது. இதில், தற்போது தினமும் ஏராளமானோர் நடைப்பயிற்சி செய்து வருகின்றனர். மேலும், ஆரணியை கோட்டமாக உயர்த்தினேன். ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை கொண்டு வந்தேன். இவ்வாறு பல பணிகள் செய்துள்ளேன்.
2021 தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றால், தொகுதியில் அனைத்து சாலைகளையும் அமைத்துத் தருவேன் என்று கூறியதை நிறைவேற்றியுள்ளேன். மேலும், அனைத்து கிராமங்களிலும் என்னுடைய தொகுதி நிதியிலிருந்து கலையரங்கம் கட்டிக் கொடுத்துளேன். மேலும், கிராமங்களில் பயணியர் நிழற்குடைகள் அமைத்துக் கொடுத்துள்ளேன்.
ஆரணியைச் சுற்றியுள்ள பைபாஸ் சாலைககளான ஆரணி } சேவூர் சாலை, இரும்பேடு சாலை, எஸ்.வி.நகரம் சாலை, முள்ளிப்பட்டு ஹவுசிங்போர்டு சாலை, தச்சூர் சாலை ஆகியவை இரவு வேளைகளில் இருள் சூழ்ந்திருந்ததால், சட்டப் பேரவைத் தொகுதி நிதியிலிருந்து சென்டர் மீடியன் மின் விளக்கு வசதி செய்துகொடுத்துள்ளேன். இவ்வாறு சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளேன்.
சட்டப் பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் நாள்களைத் தவிர, மற்ற நாள்களில் ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி அலுவலத்தில் காலை முதல் இரவு வரை இருந்து மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்த ஒரே எம்எல்ஏ நான்தான். ஆரணி தொகுதியை குறைகளே இல்லாத நிறைவுபெற்ற தொகுதியாக மாற்றியுள்ளேன் என்றார்.
இதுகுறித்து, ஆரணியை அடுத்த எம்.பி.தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், எங்கள் பகுதிக்கு நெற்களம் கேட்டிருந்தோம். அதை செய்யவில்லை என்றார்.
மேலும், சில கிராமங்களில் எங்கள் பகுதிகளில் மினி குடிநீர்த் தொட்டி கேட்டிருந்தோம். இதற்கு, அமைத்துத் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றாமல் 5 ஆண்டுகள் முடிந்துவிட்டது என்று தெரிவித்தனர்.
மேலும், சில கிராமங்களில் பகுதி நேர நியாயவிலைக் கட்டடம், காரிய மேடை ஆகியவை அமைத்துத் தரவில்லை என்று குறையாகத் தெரிவித்தனர். சில கிராமங்களில் 90 சதவீதம் பணிகளை செய்துள்ளார் என்றனர்.