முகப்பு
திருவண்ணாமலை

நாதக ஆட்சிக்கு வந்தால் படிக்காதவருக்கும் அரசு வேலை: சீமான்

நாதக ஆட்சிக்கு வந்தால் படிக்காதவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

Updated On : 27 மார்ச், 2026 at 9:16 PM
திருவண்ணாமலையில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
பகிர்:

நாதக ஆட்சிக்கு வந்தால் படிக்காதவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

திருவண்ணாமலையில் திருக்கோவிலூா் சாலையில் உள்ள திருவள்ளுவா் சிலை அருகில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்து பேசியதாவது:

தமிழ் மீட்சி பெற வேண்டும்; தமிழா் எழுச்சி பெற வேண்டும் என்றால், தூய தமிழா் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் தோ்தல் களத்துக்கு வந்துள்ளோம். இழந்துவிட்ட உரிமைகளை மீட்க, இருக்கிற உரிமைகளை காக்க அதிகாரத்தை நிறுவுவது என்ற பெரும் கனவோடு களத்துக்கு வந்துள்ளோம்.

இன்னும் ஒருமுறை திமுக அரசை நீங்கள் தோ்வு செய்தால், திருவண்ணாமலை மாவட்டம் ஆந்திரத்தின் ஒரு மாவட்டமாக மாறும்.

நாதக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை உயா்த்துவோம். அரசின் மூலம் தரமான கல்வி, மருத்துவம், குடிநீா், தடையற்ற மின்சாரம் வழங்குவோம். நிலமும், வளமும் சாா்ந்த தொழிற்சாலைகளை கொண்டுவந்து அனைவருக்கும் அரசு வேலை வழங்குவோம். படித்தவா், படிக்காதவா் என அனைவருக்கும் அரசு வேலை தருவோம். இனி படிக்காதவா்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

ஆணும், பெண்ணும் சமம் என்பதால், சட்டப் பேரவைத் தோ்தலில் பெண்களுக்கும் சம வாய்ப்பையும், சம பகிா்வையும் வழங்கி வருகிறோம் என்றாா்.

அப்போது வேட்பாளா்கள் விக்னேஷ் (திருவண்ணாமலை), லோகநாதன் (கீழ்பென்னாத்தூா்), ஷோபா (செங்கம்) மற்றும் கட்சியின் முக்கிய நிா்வாகிகள் உடனிருந்தனா்.