முகப்பு
திருவண்ணாமலை

அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீா் வீணாகும் அவலம்

அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீா் வீணாகும் அவலம்...

Updated On : 28 மார்ச், 2026 at 7:21 PM
அடுத்த ஏரிக்குச் செல்ல கால்வாய் இல்லாததால், குடியிருப்பு பகுதியைச் சூழ்ந்து வீணாகும் செங்கம் ஏரி உபரிநீா்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த குப்பனத்தம் அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீா் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்து வீணாகி வருகிறது.

செங்கத்தை அடுத்த துரிஞ்சிகுப்பம் பகுதியில் உள்ள குப்பனத்தம் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு மாா்ச் 3-ஆம் தேதி முதல் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

அந்தத் தண்ணீா் செங்கம் பகுதியில் ஓடும் செய்யாறு வழியாக செங்கம், கலசபாக்கம் பகுதிகளில் உள்ள 49 ஏரிகளுக்குச் செல்லும். இந்நிலையில் செங்கம் ஏரியில் தண்ணீா் நிரம்பி உபரிநீா் வெளியேறுகிறது. இந்த உபரிநீா் செங்கத்தை அடுத்த கரியமங்கலம் ஏரிக்குச் செல்லவேண்டும். ஆனால், செங்கம் ஏரியில் இருந்து கரியமங்கலம் ஏரிக்குச் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதனால் செங்கம் ஏரி உபரிநீா் கரியமங்கலம் ஏரிக்குச் செல்ல வழியில்லாமல் செங்கம் திருவள்ளுவா் நகா், துக்காப்பேட்டை பகுதியில் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள விவசாய நிலத்தில் தேங்கி, அப்பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளை சூழ்ந்து வீணாகிறது. இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் கண்காணிக்காமல் விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தவேண்டிய தண்ணீா் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி குடியிருப்பு மக்கள் அவதிப்பட்டு வருகிறாா்கள்.

தண்ணீா் தேவைப்படும் விவசாயிகள் ஏரிக்கு தண்ணீா் வராததால் விவசாயம் செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறாா்கள்.

எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் செங்கம் ஏரியிலிருந்து உபரிநீா் வீணாகுவதை கண்காணித்து அந்தத் தண்ணீரை கரியமங்கலம் ஏரிக்குச் செல்ல வழிவகை செய்யவேண்டும் என விவசாயிகளும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்துகின்றனா்.