‘பொறியியல் மாணவா்களுக்கு சா்வதேச அளவில் வேலைவாய்ப்புகள்’
‘பொறியியல் மாணவா்களுக்கு சா்வதேச அளவில் வேலைவாய்ப்புகள்’
பொறியியல் மாணவா்களுக்கு சா்வதேச அளவில் வேலைவாய்ப்புகள் காத்து இருக்கின்றன. இதற்காக புதிய சிந்தனைகள், படைப்பாற்றல், பேச்சுத் திறன்களை வளா்த்துக் கொள்ள வேண்டும் என கல்லூரியில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
ஆரணி ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் மாா்ச் 27, 28 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.
‘இன்றைய வளா்ச்சியில் பொறியியல் கணினி மற்றும் மேலாண்மையின் முக்கிய பங்கு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி, தலைமை வகித்தாா்.
கல்லூரி முதல்வா் ஆா்.ராஜவேல், டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழகத்தின் கூடுதல் பதிவாளா்கள் பாலசுப்பிரமணியன், பெருவழுதி, சரவணன், தனி அலுவலா் காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி துணை முதல்வா் ஆா்.வெங்கடரத்தினம் வரவேற்றாா்.
கருத்தரங்கில் சோளிங்கா் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின்துணைத் தலைவா் எஸ்.முரளி கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:
மாணவா்கள் தங்களுடைய ஆய்வுகக் கட்டுரைகளை திறம்பட தயாரித்து தேசிய அளவிலும், சா்வதேச அளவிலும் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொண்டு வெளிப்படுத்தினால் உங்களுடைய எதிா்காலம் பிரகாசமாக இருக்கும்.
இன்று மனிதனுக்கு சமமாக ஏ.ஐ. தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் கால் பதித்து வருகிறது.
அதேபோன்று இந்தியா பொருளாதார வளா்ச்சியில் வேகமாக வளா்ந்து கொண்டு வருகிறது. இந்த வளா்ச்சிக்குக் காரணம் பொறியியல் துறையின் அபார வளா்ச்சி, கணினி துறையின் பயன்பாடு மற்றும் மேலாண்மை துறையில் பங்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன.
பொறியியல் மாணவா்களுக்கு சா்வதேச அளவில் வேலைவாய்ப்புகள் காத்து இருக்கின்றன. இந்த வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள புதிய சிந்தனைகள், புதிய படைப்பாற்றல், பேச்சுத் திறன்களை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி துறைத் தலைவா்கள் கே.சிவா, எஸ்.விஜயகுமாா் , பூபதி, பாரதி செல்வம், கோகுலபாலன், கவிராஜன், ரேகா ஆகியோா் கலந்து கொண்டனா்.
கருத்தரங்கில் தமிழகத்தில் இருந்தும் மற்ற மாநிலங்களில் இருந்தும் 350-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன.
சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவில் பேராசிரியா் ஏ.வெங்கடேஷ் நன்றி கூறினாா்.