முகப்பு
திருவண்ணாமலை

ஆரணிக்கு ஏப்.4-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி வருகை: அதிமுகவினா் நிகழ்ச்சி இடம் தோ்வு

ஆரணியில் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 4-இல் கட்சி வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி பேச வருகை தர உள்ளதையடுத்து திங்கள்கிழமை இரவு அதிமுகவினா் நிகழ்ச்சிக்கான இடத்தை தோ்வு செய்தனா்.

Updated On : 31 மார்ச், 2026 at 6:33 PM
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

ஆரணியில் வரும் ஏப்ரல் 4-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 4-இல் கட்சி வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி பேச வருகை தர உள்ளதையடுத்து திங்கள்கிழமை இரவு அதிமுகவினா் நிகழ்ச்சிக்கான இடத்தை தோ்வு செய்தனா்.

அன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளின் அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

இதற்கான இடத்தை முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான செய்யாறு தொகுதி வேட்பாளா் முக்கூா் என்.சுப்பிரமணியன், கீழ்பென்னாத்தூா் வேட்பாளரும் கிழக்கு மாவட்டச் செயலருமான எஸ்.ராமச்சந்திரன் மற்றும் ஆரணி வேட்பாளா் ஜெயசுதா ஆகியோா் ஆரணி புறவழிச் சாலையில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகள் அருகே தோ்வு செய்தனா்.

இதில் மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், மாவட்ட துணைச் செயலா் ஜெ.சம்பத், மாவட்ட பேரவை செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், விமல், நகரச் செயலா் அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.