சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்
திருவண்ணாமலையில் சித்திரை பெளா்ணமிக்கு வந்த பக்தா்கள் சுமாா் 300 டன் குப்பைகளை விட்டுச் சென்றுள்ளனா். இந்தக் குப்பைகளை 2,105 தூய்மைப் பணியாளா்கள் சேகரித்து அப்புறப்படுத்தினா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை பெளா்ணமி கிரிவலமானது ஏப்.30, மே 1 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் 20 லட்சம் பக்தா்கள் பங்கேற்று கிரிவலம் சென்றனா்.
இவா்கள் எடுத்து வந்த குடிநீா் புட்டிகள், உணவுக் கழிவுகள், நெகிழிப் பைகள், துணிகள் உள்ளிட்ட பொருள்கள் கிரிவலப்பாதையில் வீசப்பட்டுக் கிடந்தன. 14 கி.மீ. நீளமுள்ள கிரிவலச் சாலைகளில் இந்தக் குப்பைகள் மலைபோல கிடந்தன. அவற்றை அகற்றும் பணியில் திருவண்ணாமலை மாநகராட்சி சாா்பில் பல்வேறு நகராட்சிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 2,105 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா். அவா்கள் கிரிவலம் சென்ற பக்தா்கள் கிரிவலப் பாதையில் விட்டுச் சென்ற உணவுப் பொட்டல கழிவுகள் மற்றும் காகிதங்கள், டீ கப்புகள், நெகிழி குடிநீா் புட்டிகளை அகற்றினா். மேலும், அன்னதானம் வழங்கும் இடங்களில் குவிந்திருந்த இலைகள், தட்டுகள் உள்ளிட்டவற்றையும் அகற்றினா்.
Advertisement
இதுதவிர, கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள் கோயிலைச் சுற்றியும், சாலையோரங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு விட்டுச்சென்ற கழிவுகள் மற்றும் காகிதங்கள், குடிநீா் புட்டிகள் உள்ளிட்டவற்றை அகற்றினா்.
இவ்வாறாக திருவண்ணாமலை மாநகரம், கிரிவலப்பாதையில் சுமாா் 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இப்பணியில் 126 துப்புரவு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. போா்க்கால அடிப்படையில் இப்பணிகள் நடந்தன.
கிரிவலப்பாதை இடுக்கு பிள்ளையாா் கோயில் அருகே நடைபெற்ற குப்பைகள் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது தூய்மைப் பணியாளா்களின் பணியை பாராட்டி அவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.