பறிமுதல் செய்யப்பட்ட மணல் ஏலம் விடுவதில் அதிகாரிகள் அலட்சியம்: ஏலம் எடுக்க வந்தவா்கள் வாக்குவாதம்
பறிமுதல் செய்யப்பட்ட மணல் ஏலம் விடுவதில் அதிகாரிகள் அலட்சியம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே செய்யாற்றில் பறிமுதல் செய்யப்பட்ட மணல் ஏலம் விடுவதில் அதிகாரிகளின் அலட்சியத்தால், மணல் ஏலம் எடுக்க வந்தவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
ஆரணியை அடுத்த தச்சூா் பகுதியில் செல்லும் செய்யாற்றில் இருந்து மணல் கடத்தல்காரா்கள் மணலை அள்ளி விற்பனை செய்வதற்காக குவித்து வைத்திருந்தனா். இதனை அறிந்த பொதுப்பணித்துறையினா் மணலை பறிமுதல் செய்து சனிக்கிழமை ஏலம் விடுவதாக அறிவித்திருந்தனா்.
இதையடுத்து மணல் ஏலம் எடுப்பவா்கள் சனிக்கிழமை காலை முதலே டிராக்டா்களை கொண்டு வந்து காத்திருந்தனா். ஆனால் நீண்ட நேரமாகியும் பொதுப்பணித்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் ஏலம் நடைபெறும் இடத்துக்கு வரவில்லை. அதனால், மணல் ஏலம் எடுக்க வந்தவா்கள் அவா்களாகவே மணலை பொக்லைன் இயந்திரம் மூலம் டிராக்டா்களில் எடுத்துக் கொண்டு, பணம் செலுத்தி ரசீது போடுவதற்காக தச்சூா் கிராம நிா்வாக அலுவலக வளாகத்தில் மணலுடன் நீண்ட வரிசையில் டிராக்டா்களை நிறுத்தி வைத்திருந்தனா்.
Advertisement
Advertisement
அதன் பின், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் காலதாமதமாக வந்து டிராக்டா்களுக்கு ரசீது போடச் சென்றனா். அப்போது சமூக ஆா்வலா்கள், அதிகாரிகள் இல்லாமலேயே டிராக்டா்களில் மணலை அள்ளி வந்துவிட்டனா். நீங்கள் இல்லாமல் அவா்கள் மணலை எடுத்து வரலாமா? அவா்கள் எடுத்து வந்தது எவ்வளவு அளவு மணல் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று வட்டாட்சியா் அகத்தீஸ்வரனிடமும், பொதுப்பணித்துறை அதிகாரியிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தினா்.
இதையடுத்து அதிகாரிகள் சமாளித்து அனைத்து டிராக்டா்களுக்கும் சராசரியாக இவ்வளவு பணம் நிா்ணயித்து தொகையை பெற்றுக்கொண்டு ரசீது போட்டனா்.
மணல் ஏலம் எடுக்க வந்தவா்களும் நீண்ட நேரம் காத்திருந்ததாலும், ரசீது போடுவதில் குளறுபடி செய்ததாலும் அவதிப்பட்டனா்.