முகப்பு
வேலூர்

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

ராணிப்பேட்டை அருகே விவசாயியின் பம்புசெட்டை இடித்து தள்ளியும், நெற் பயிர்களை சேதப்படுத்தியும் அத்துமீறியவர்கள் மீது நடவடிக்கை

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

ராணிப்பேட்டை அருகே விவசாயியின் பம்புசெட்டை இடித்து தள்ளியும், நெற் பயிர்களை சேதப்படுத்தியும் அத்துமீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டையை அடுத்த மேல்வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். விவசாயியான இவர், அதே கிராமத்தில் தனக்குச் சொந்தமாக உள்ள 2.44 ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கர் பகுதியை அம்மூரைச் சேர்ந்த பாரதிக்கு விற்று விட்டாராம். மீதமுள்ள நிலத்தில் ஆனந்தன் நெல் பயிரிட்டு இருந்தார்.
இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி பாரதி மற்றும் அவரது உறவினர்கள் ஆனந்தனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கிருந்த பம்ப் செட்டையும், ஆழ்துளைக் கிணறு ஆகியவற்றையும் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளியும், நடவு செய்யப்பட்டிருந்த நெல் பயிர்களையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுக்க முயன்ற ஆனந்தன், அவரது தங்கை கமலா ஆகியோரை தாக்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து ஆனந்தன் கடந்த 23-ஆம் தேதி ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால்  காவல்துறையினர் அதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தன், அவரது உறவினர்கள் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அருண், சுபாஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் ராணிப்பேட்டை காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். 
இதையடுத்து காவல் ஆய்வாளர் சரவணன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்தார். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆட்சியர், எஸ்.பி. கோட்டாட்சியர் ஆகியோரிடம் முறையிடப் போவதாகத் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →