நகராட்சி குப்பைகளை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
பேர்ணாம்பட்டு அருகே நகராட்சியில் அள்ளப்படும் குப்பைகளை பல்லவி குப்பம் கிராமத்தில் கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பேர்ணாம்பட்டு அருகே நகராட்சியில் அள்ளப்படும் குப்பைகளை பல்லவி குப்பம் கிராமத்தில் கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பேர்ணாம்பட்டு நகராட்சியில் அள்ளப்படும் குப்பைகள் பல்லலகுப்பம் கிராமத்தின் வன எல்லையில் உள்ள அரசுப் புறம்போக்கு இடத்தில் கடந்த ஒரு மாதமாக கொட்டப்படுகின்றன.
அக்கிராமத்தில் உள்ள கால்நடைகள் மேய்ச்சலுக்காக அப்பகுதிக்குச் செல்லும் போது குப்பைக் கழிவுகளை உண்கின்றன. அதிலுள்ள மருத்துவமனை கழிவுகளையும் கால்நடைகள் உண்பதால் அவை இறக்க நேரிடுவதாக அக்கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அங்கு குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, குப்பை கொட்டும் இடம் அருகே கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தச் சென்றனர். அப்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, கிராம மக்கள் பேர்ணாம்பட்டு காவல் நிலையம் எதிரே போராட்டம் நடத்த
முயன்றனர்.
தகவலறிந்து வந்த நகராட்சி ஆணையர் ஸ்டேன்லிபாபு, ஆட்சியர் உத்தரவின் பேரில்தான் அரசுப் புறம்போக்கு நிலத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அங்கு யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் குப்பை கிடங்கு அமைத்து, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அவற்றை முறைப்படுத்த உள்ளோம் என்றார். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.