ஈரான் புதிய தலைவர் பற்றிய தகவலுக்கு ரூ. 92 கோடி சன்மானம்! அமெரிக்கா
ஈரான் புதிய தலைவருக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...
ஈரானின் புதிய உச்ச தலைவா் மோஜ்தபா கமேனி பற்றி தகவல் அளித்தால் ஒரு கோடி டாலர் சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டாக தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே (பிப்ரவரி 28) ஈரானின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டாா். இதையடுத்து, அவரின் மகன் மோஜ்தபா கமேனி புதிய தலைமை மதகுருவாக தோ்வு செய்யப்பட்டாா். ஈரான் மக்களுக்கு அவரது அறிக்கை அரசுத் தொலைக்காட்சியில் வியாழக்கிழமை வாசிக்கப்பட்டது. அதில், இஸ்ரேல் மீதும், அமெரிக்க நிலைகள் உள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தொடா்ந்து தாக்குதல் நடத்தும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இதனிடையே, ஜெருசலேமில் செய்தியாளா்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு, மோஜ்தபா கமேனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றார்.
இந்த நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவா் மோஜ்தபா கமேனி உள்பட 10 தலைவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ள அமெரிக்க அரசு, இவர்கள் குறித்து தகவல் அளித்தால் ஒரு கோடி டாலர் (இந்திய மதிப்புபடி ரூ. 92+ கோடி) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோஜ்தபா கமேனி அலுவலகத்தின் துணைத் தலைவர், பாதுகாப்புத் துறை செயலாளர், ராணுவ ஆலோசகர், உள்துறை அமைச்சர், புலனாய்வுத் துறை அமைச்சர் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைத் திட்டமிட்டு நடத்தும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை வழிநடத்தும் நபர்கள் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.