''படிப்பது 4 பேர்; பணியாற்றுவதோ 5 பேர்''
தமிழக அரசு கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் இக்காலத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு
தமிழக அரசு கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் இக்காலத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பதால் அரசு நிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரக்கோணம் நகரில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் 4 மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலையில் அவர்களுக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர் என இருவர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என மூவர் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழக அரசு தற்போது கல்வித் துறையில் மிகப் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறது.
மேலும், அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகளவில் இருக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அரக்கோணம் வட்டாரத்தில் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது. மேலும், பல பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கையே இல்லாத நிலையும் காணப்படுகிறது.
அரக்கோணம் கிருபில்ஸ்பேட்டையில் எம்எல்ஏ அலுவலகத்துக்கு பின்புறம் நகராட்சித் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த காலங்களில் ஆலமரப் பள்ளி என அப்பகுதி பொதுமக்களால் அழைக்கப்பட்ட இப்பள்ளியில் அதிகபட்சமாக 250 மாணவர்கள் படித்த காலமும் உண்டு. 36, 35, 34 ஆகிய வார்டுகள், வெங்கடேசபுரம், சாயிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொடக்க நிலை மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில், இப்பள்ளியில் தற்போது 4 மாணவர்கள் மட்டுமே படிக்கும் அவலநிலை உள்ளது.
இப்பள்ளிக்கென இரு வகுப்பறைகள் கொண்ட மூன்று கட்டடங்கள் இருந்தன. தற்போது தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்காக இரு கட்டடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள ஒரு கட்டடத்தின் ஒரு வகுப்பறையில் நகராட்சித் தொடக்கப் பள்ளியும் மற்றொரு அறையில் நகராட்சி உருது பள்ளியும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நகராட்சித் தொடக்கப் பள்ளியில் வருகை பதிவேட்டில் 1 முதல் 5 வரை 10 மாணவர்கள் படிப்பதாகத் தெரிவித்திருந்தாலும் பள்ளிக்கு தினமும் வருவது 4 மாணவர்கள் மட்டுமே. இவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என இரு ஆசிரியர்களும், சத்துணவு மையத்தில் சத்துணவு அமைப்பாளர், சத்துணவு சமையலர், சமையல் உதவியாளர் என மூன்று பேரும் என 5 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பள்ளியில் இருந்து 500 மீட்டருக்குள் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நலத் துறை நடுநிலைப் பள்ளியில் நூற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதே பள்ளியில் 1 முதல் 8- ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை 50- க்கு மேல் உள்ளது. ஆனால் நகராட்சி தொடக்கப் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுவது ஏன்? என்ற சந்தேகம் உள்ளது.
இதுகுறித்து நகராட்சித் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வராஜிடம் கேட்டபோது, இப்பள்ளிக்கென 34, 35, 36 என 3 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் இருக்கும் பெற்றோர் தங்களது பிள்ளைகளை இதே வார்டில் உள்ள பள்ளியில் மட்டுமே சேர்க்க வேண்டும் என அரசாணையே உள்ளது. ஆனால், அதையும் மீறி மற்ற வார்டுகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த 3 வார்டுகளில் மாணவர்கள் இருந்தும் இப்பள்ளியில் சேராமல் இருப்பதற்கு நாங்கள் காரணமல்ல என்றார்.
இதுகுறித்து அரக்கோணம் வட்டார உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பால்ராஜிடம் கேட்டபோது, அரக்கோணம் வட்டாரத்தில் கடந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5,327 மாணவர்கள் படித்து வந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 5,071 மாணவர்களே உள்ளனர்.
மாணவர் எண்ணிக்கை மற்றும் மாணவர் சேர்க்கை தற்போது பல பள்ளிகளில் குறைவாக இருப்பதற்கான காரணங்கள் ஆராயப்படுகின்றன. மேலும் பல ஆங்கிலப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன.
குறிப்பிட்ட அரசு நகராட்சி பள்ளிக்கு அருகிலேயே ஆதிதிராவிடர் நலத் துறை நடுநிலைப் பள்ளி இருப்பதால் மாணவர்கள் இரு இடத்தில் சேர்க்கப்படுகின்றனர். இதனாலேயே நகராட்சித் தொடக்கப் பள்ளியில் சேர்க்கை குறைவாக இருக்கிறது. சேர்க்கை முடிய இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. குறிப்பிட்ட பள்ளியில் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
அருகருகே இரு பள்ளிகள் இருப்பதே சேர்க்கை குறைவுக்கு காரணம் என கல்வி அலுவலர் தெரிவிக்கையில், கல்வித் துறை உடனடி நடவடிக்கை எடுத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
* அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகளவில் இருக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அரக்கோணம் வட்டாரத்தில் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது. மேலும், பல பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கையே இல்லாத நிலையும் காணப்படுகிறது *