தேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்
அங்கீகாரம் இல்லாத கட்சி தேமுதிக என மறைமுகமாகப் பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு எல்.கே. சுதீஷ் பதில்...
2011 தேர்தலில் தேமுதிக இல்லை என்றால் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது என தேமுதிக எம்.பி., எல்.கே. சுதீஷ் இன்று (மார்ச் 25) தெரிவித்தார்.
இப்போது பேசும் எடப்பாடி பழனிசாமி 2011 தேர்தலில் எங்கு இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் விமர்சித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் வழிபாடு செய்துவிட்டு தமிழிசை செளந்தரராஜனுடன் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை இன்று (மார்ச் 25) தொடங்கினார்.
இதற்கு முன்பு 193 தொகுதிகளில் பிரசாரம் செய்திருந்தாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக பிரசாரத்தை இன்று தொடங்கியுள்ளார்.
இதில், பொதுமக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி தேமுதிகவை அங்கீகாரம் இல்லாதக் கட்சி எனக் குறிப்பிட்டிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ''அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக இடம், அங்கீகரிக்கப்பட்ட விசிகவுக்கு குறைந்த தொகுதி. இனியாவது உணர்ந்துகொள்ளுங்கள், திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள். அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கிறது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகைப் புரிந்த தேமுதிக எம்.பி., எல்.கே. சுதீஷ், எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களுடன் பேசியிருந்தார்.
எல்.கே. சுதீஷ் பேசியதாவது:
''திமுக கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதிகளில், விரும்பிக் கேட்ட தொகுதிகளில் 70% தர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை காலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்.
2011 தேர்தலில் தேமுதிக இல்லையென்றால் அதிமுக ஆட்சிக்கே வந்திருக்காது. இப்போது பேசும் எடப்பாடி பழனிசாமி 2011 தேர்தலில் எங்கு இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்'' எனக் குறிப்பிட்டார்.