அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் உணவுக்காக கோடை காலத்தில் கூட வெயிலின் கொடுமையில் வாடுகின்றனர்.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால், அங்கன்வாடி குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்காதது வேதனைக்குரியது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அங்கன்வாடி மையம் என்பது, மத்திய, மாநில அரசால் நடத்தப்படும் தாய்சேய் நல மையம் ஆகும். இங்கு, பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன.
1975-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் (ஐஇஈந)கீழ் குழந்தைகள் பசியால் வாடி நலமற்றவர்களாக மாறுவதைத் தடுக்கவும், அவர்களிடையே பெருமளவில் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கவும், இந்த மையங்கள் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டில் இந்த மையங்கள் பால்வாடி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை எழுச்சிமிகு முன் பருவ குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் மையங்களாக தரம் உயர்த்தப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அங்கன்வாடி மையங்கள் மூலம் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர் உதவித் தொகை பெறுவோர் என பயன் அடைந்து வருகின்றனர். அங்கன்வாடி மையங்களை எழுச்சிமிகு முன் பருவ குழந்தை வளர்ச்சி மற்றும் கற்றல் மையங்களாக தரம் உயர்த்த அரசு முடிவு செய்திருந்தது.
முதல்கட்டமாக, மொத்தமுள்ள 54,439 அங்கன்வாடி மையங்கள் மூலம், 4 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயனடைவர் என கணக்கிடப்பட்டது. இவையனைத்தும் பயன்தரும் திட்டங்கள் என்றபோதிலும், அங்கன்வாடி பள்ளிக் குழந்தைகளுக்கு விடுமுறை விடப்படுவதில்லை என்பது வருத்தத்துக்குரிய தகவலாகும்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.