வேலூரில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்ததாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் அருகே பாலமதியைச் சேர்ந்த பச்சையம்மாள் என்ற பானுமதி தனது 10 வயது மகளின் ஜாதி சான்றிதழை பள்ளியில் அண்மையில் சமர்ப்பித்தார். இதன் மீது சந்தேகமடைந்த தலைமை ஆசிரியர், அதை வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். ஆய்வு செய்ததில் அது போலி என தெரியவந்தது.
இதையடுத்து, பச்சையம்மாளிடம், வட்டாட்சியர் பாலாஜி நடத்திய விசாரணையில், சில மாதங்களுக்கு முன் மகளுக்கு ஜாதிச் சான்றிதழ் பெறுவதற்காக அலுவலகம் வந்த போது, பெண் ஒருவர் சான்றிதழ் பெற்றுத் தர உதவுவதாகக் கூறி பணம் பெற்று, சான்றிதழ் கொடுத்ததாகத் தெரிவித்தார். வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் நடத்திய விசாரணையில், சங்கரன்பாளையத்தைச் சேர்ந்த சாந்தி (58), சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுமதி (36), சூரியகுளத்தைச் சேர்ந்த மேரி (32), வெட்டுவாணத்தைச் சேர்ந்த கவிதா, ஓல்டு டவுனைச் சேர்ந்த சரவணன் (45) ஆகியோர் போலிச் சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து, திங்கள்கிழமை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த சாந்தி, சுமதி, மேரி ஆகியோரை ஊழியர்கள் பிடித்து தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, போலிச் சான்றிதழ்களைப் பறிமுதல் செய்தனர். தலைமறைவான கவிதா, சரவணன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.