இரு பைக்குகள் மோதல்: தொழிலாளி சாவு
ஜோலார்பேட்டை அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் கட்டடத் தொழிலாளி இறந்தார்.
ஜோலார்பேட்டை அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் கட்டடத் தொழிலாளி இறந்தார்.
ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி மலைப் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (35). கட்டடத் தொழிலாளியான இவரும், இவரது சகோதரர் தேவேந்திரனும் ஜோலார்பேட்டையில் தங்கி வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், இருவரும் வெள்ளிக்கிழமை பைக்கில் சென்றனர். ஜோலார்பேட்டையை அடுத்த காவேரிப்பட்டு அருகே சென்றபோது எதிரே வந்த கேதாண்டப்பட்டி சுகர்மில் பகுதியைச் சேர்ந்த தமிழருவியின் பைக் மீது மோதியது. இதில் வேலு நிகழ்விடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த தேவேந்திரன், தமிழருவி ஆகிய இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், தமிழருவி மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.