தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திரத்தில் நிபந்தனையுடன் தடை நீக்கம்: விவசாயிகள் ஏமாற்றம்
தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திர மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த தடை சில நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த மாநிலத்திலுள்ள
தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திர மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த தடை சில நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த மாநிலத்திலுள்ள ஜூஸ் நிறுவனங்களுக்கு தமிழக மாம்பழங்களை விற்பனை செய்ய தொடர்ந்து தடை நீடிப்பதால் தமிழக விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழக மாம்பழங்களில் அதிகளவில் சாறு கிடைப்பதால் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்ட த்தில் உள்ள தனியார் ஜூஸ் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றை அதிகளவில் கொள்முதல் செய்கின்றன.
இதனால், ஆந்திரத்தில் மாம்பழங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக அந்த மாநில விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக மாம்பழங்கள், மாங்காய்களுக்கு சித்தூர் மாவட்ட நிர்வாகம் கடந்த 5-ஆம் தேதி முதல் தடை விதித்தது.
இதையடுத்து, தமிழகத்தில் இருந்து மாம்பழங்கள் ஏற்றிச்சென்ற லாரிகள் ஆந்திர எல்லையிலேயே தடுத்து திருப்பியனுப்பப்பட்டன. இதனால், தமிழக மாம்பழ விவசாயிகள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகினர். ஏற்கனவே, ஆயிரக்கணக்கான டன் மாம்பழங்கள் வீணான நிலையில், இந்த தடை தொடர்ந்தால் சுமார் 10 ஆயிரம் டன் மாம்பழங்கள் வீணாகக்கூடும். இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே, இந்த தடையை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், ஆந்திரத்தில் நிலவிய தடை விலக்கப்படாததால் வேலூர் மாவட்டத்தின் பல இடங்களில் கடந்த இரு நாள்களாக சாலைகளில் மாம்பழங்களைக் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், வேலூர் மாவட்ட வேளாண் விற்பனைக் குழு துணை இயக்குநர் நரசிம்ம ரெட்டி, மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குநர் பர்வதம்மா ஆகியோர் தலைமையில் மாவட்ட மாங்காய் விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வெங்கடேஷ் உள்ளிட்டோர் சித்தூர் மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை நேரில் சந்தித்துப் பேசினர்.
அப்போது, தமிழக மாம்பழங்களுக்கு சித்தூரில் விதித்துள்ள தடையால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவரிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சித்தூர் மாவட்டத்திலுள்ள சந்தைகள், மண்டிகளில் மட்டும் தமிழக மாம்பழங்களை வியாபாரம் செய்துகொள்ள அந்த மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்ததாகவும், அதே சமயம், ஜூஸ் நிறுவனங்களுக்கு தமிழக மாம்பழங்களை விற்க தொடர்ந்து தடை நீடிப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, வேலூர் மாவட்ட மாங்காய் விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வெங்கடேஷ் கூறியதாவது:
தமிழக மாம்பழங்களுக்கு சித்தூர் மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள தடையால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து அந்த மாவட்ட ஆட்சியரிடம் விளக்கப்பட்டது. இதையடுத்து, சித்தூர் மாவட்டத்தில் மண்டிகள், சந்தைகளில் மட்டும் தமிழக மாம்பழங்களை வியாபாரம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஜூஸ் நிறுவனங்களுக்கு தமிழக மாம்பழங்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படவில்லை.
தொடர்ந்து, ஜூஸ் நிறுவனங்களில் அதிகபட்சம் 8 ஆயிரம் டன் தமிழக மாம்பழங்களை விற்பனை செய்து கொள்ள அனுமதி கோரப்பட்டது. இதுதொடர்பாக, தமிழக அரசு ஆந்திர அரசுடன் முறையான பேச்சு நடத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. தவிர, இந்த பிரச்னை தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியருடன் பேசுவதாகவும் சித்தூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்றார்.
தடை நீக்கப்பட்டதை அடுத்து ஆந்திர மாநிலத்துக்குள் செல்ல தமிழக மாம்பழ வாகனங்கள் திங்கள்கிழமை மாலை முதல் அனுமதிக்கப்பட்டன. இதனால், தமிழக விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.