நீதிமன்றத்தில் ஆஜராக வந்த முதியவருக்கு கத்திக்குத்து
அரக்கோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராக வந்த முதியவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அரக்கோணம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராக வந்த முதியவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அரக்கோணத்தைச் சேர்ந்தவர் கங்காதரன் (64). இவருக்கும், இவரது உறவினர் சீதாராமனுக்கும் சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் ஆஜராக கங்காதரன் வியாழக்கிழமை வந்தார்.
வியாழக்கிழமை நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றதால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருந்து கங்காதரன் வெளியே வந்தபோது அவரை, சீதாராமன் உள்ளிட்ட 3 பேர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனராம். பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டிவிட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த கங்காரதன் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக அரக்கோணம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய சீதாராமன் உள்ளிட்ட 3 பேரைத் தேடி வருகின்றனர்.
கங்காதரன் ஏற்கெனவே அரக்கோணம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கடிதம் அனுப்பியதால் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், பிணையில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.