முகப்பு
வேலூர்

திருப்பதி செல்லும் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேலூர் வருகை

திருப்பதிக்கு செல்லும் வழியில் திங்கள்கிழமை வேலூருக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Updated On : 14 மே, 2018 at 11:49 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

திருப்பதிக்கு செல்லும் வழியில் திங்கள்கிழமை வேலூருக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திங்கள்கிழமை மதியம் சேலத்திலிருந்து கார் மூலமாக சென்றார். வழியில் முதல்வருக்கு வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன்படி, வேலூரில் காட்பாடி சாலையிலுள்ள சில்க் மில் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்க கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மதியம் 3 மணி முதலே அந்த பகுதியில் காத்திருந்தனர். தொடர்ந்து, மாலை 4 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்பகுதிக்கு வந்தடைந்தார். அப்போது, மேளதாளங்கள், பட்டாசு வெடிகள் முழங்க தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அரக்கோணம் மக்களவை உறுப்பினர்
கோ.அரி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.ரவி (அரக்கோணம்), லோகநாதன் (கே.வி.குப்பம்), முன்னாள் அமைச்சர்கள் விஜய், முகமது ஜான், முன்னாள் மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.கே.அப்பு உள்ளிட்டோர் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து, முதல்வர் காரிலிருந்து சாலையில் இறங்கி அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். பின்னர், அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் முதல்வருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தனர். பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறிதுதொலைவு நடந்து சென்றபடி தொண்டர்களுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். இதையடுத்து, அவர் மீண்டும் காரில் ஏறி திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றார்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.பகலவன் தலைமையில், முதல்வர் பயணிக்கும் வழித் தடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வாணியம்பாடியில்
வரவேற்பு....
திருப்பதிக்கு கார் மூலம் வாணியம்பாடி வழியாகச் சென்ற தமிழக முதல்வருக்கு திங்கள்கிழமை மதியம் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் லட்சுமிபுரம் அருகே வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், எஸ்.பி. பகலவன், டிஜஜி வனிதா ஆகியோர் பூச்செண்டு கொடுத்தும், சால்வை அணிவித்தும் முதல்வரை வரவேற்றனர். உடன் முன்னாள் எம்எல்ஏக்கள் கோவி.சம்பத்குமார், ரமேஷ், சார் ஆட்சியர் பிரியங்கா, வாணியம்பாடி டிஎஸ்பி முரளி, வட்டாட்சியர் பிரபுகணேஷ், செயல் அலுவலர் விஜயா, ஒன்றிய அதிமுக செயலாளர்கள் ராஜா, ரமேஷ், நகரச் செயலாளர்கள் சீனிவாசன், ஞானசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.