நாளை முதல் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்
அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (மே 23) முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நடைபெறுகிறது.
அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (மே 23) முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நடைபெறுகிறது.
அனைத்து வட்டங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் அனைத்து கிராமக் கணக்குகளும் துணை ஆட்சியரால் தணிக்கை செய்யப்படும். அப்போது பொதுமக்களும் தங்களது குறைகள் குறித்து மனுக்கள் அளிப்பர். அரக்கோணம் வட்டத்தில் இந்த ஆண்டு ஜமாபந்தி மே 23-ஆம் தேதி தொடங்குகிறது. வேலூர் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துனை ஆட்சியர் பேபி இந்திரா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற உள்ளார்.
இதுகுறித்து வட்டாட்சியர் ஆர். பாபு கூறியதாவது:
மே 23, 24 ஆகிய இரு நாள்கள் அரக்கோணம் தெற்கு உள்வட்ட கிராமங்களின் கணக்குகளும், 24, 25, 29 ஆகிய தேதிகளில் பாராஞ்சி உள்வட்ட கிராமங்களின் கணக்குகளும், 29, 30, 31 ஆகிய தேதிகளில் பள்ளூர் உள்வட்ட கிராமங்களின் கணக்குகளும் மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் அரக்கோணம் வடக்கு உள்வட்ட கணக்குகளும் தணிக்கை செய்யப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அந்தந்த நாள்களில் குறைகளை மனுவாக எழுதி தனித் துணை ஆட்சியரிடம் தெரிவிக்கலாம்.
நிலவரிக் கணக்குகள், பட்டா மாற்றம், பட்டா நகல் கோருதல், அரசு நலத் திட்டங்களின் கீழ் உதவி கோருதல், கிராம வளர்ச்சிக்கான திட்டப் பணிகள், குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் இதர தேவைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்படும்.
தணிக்கை நாள்களுக்கு முன்னதாகத் தரப்படும் மனுக்களும் தணிக்கை நாளில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அஞ்சல் மூலமாக மனுக்களை அனுப்புவோர், ஜமாபந்தி அலுவலருக்கோ அல்லது வட்டாட்சியருக்கோ அனுப்பலாம் என்றார் அவர்.