ஆம்பூர் அருகே வெள்ளக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒரு நாள் இலவச ஓவியப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பயிற்சிக்கு தலைமை ஆசிரியர் எஸ். தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். ஆம்பூர் ஸ்ரீ கிருஷ்ணா ஓவியப் பயிற்சி பள்ளி நிறுவனரும் ஓவியருமான என். இங்கர்சால் மாணவர்களுக்கு ஓவியக்கலை உருவான விதம், ஓவியத்தின் பயன்கள், ஓவியக்கலைக்கு பிற பாடங்களோடு உள்ள தொடர்பு ஆகியவை பற்றி விரிவாகக் கூறினார்.
பின்னர் அளவுகோல் துணையின்றி கோடு வரைதல், மேஜிக் ஓவியம், எழுத்தோவியங்கள், எண்ணோவியங்கள், விரல் ரேகை ஓவியம், மணல் ஓவியம் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். மேலும், விரல் கணித விளையாட்டுகள் மூலம் பெருக்கல் வாய்பாடு எளிய முறையில் கணக்கிடுதலைக் கற்பித்தார். சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்கள் 17 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் வி. வேலு, ஆசிரியர்கள் ஹரிபாபு, சரளா, தாமரை ஆகியோர் கலந்துகொண்டனர்.